Friday, October 13, 2023

ஒளிவு

 ஞானியர்கள் எப்போதும் தங்களின் ஞானத்தை ஒளிவாகவே வைத்திருப்பர்.இதில் சூஃபிகள் கில்லாடியர்கள்.முழு பைத்தியமாகவே திரிவார்கள்.பைத்தியக்காரனிடம் யாராவது ஞானம் கத்துக்க போவாங்களா..பதினாறடி விலகியே சாதாரணமானவர்கள் செல்வார்கள்.சூஃபிகளை சுற்றி ஒரு போதும் கூட்டம் இருக்காது.ஏதாவது சாக்கடையிலோ அசிங்கமான இடங்களிலோ இருப்பார்கள்.கிறிஸ்து கூட ஒரு விபசாரியின் இல்லத்தில் தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.அவர்கள் விருப்பப்பட்டால் ஒழிய அவர்களை அடையாளம் கண்டு கொள்ளவது இயலாத காரியம்.குமரி மாவட்டத்தில் ஏராளம் இப்படியான பைத்தியங்களை சகஜமாக காணலாம்.அப்படி ஒருவர் தான் மக்கிடி லெப்பை.

மக்கிடி லெல்பை ஒரே காலத்தில் குமரி மாவட்டத்திலும் திருவனந்தபுரத்திலும் தோன்றுவார்.என்னோட வீட்டுக்கு எதிர்தாற் போல ஒரு கல்மண்டபம் இருந்தது.அதில் தான் தங்குவார்.என்னோட தாத்தா இவரை பின்தொடர்ந்தே சுற்றிக்கொண்டிருப்பார்.பெரிய ஆன்மீகவாதியாக இருந்தாலும் சொத்து சுகங்களை பற்றிக் கொண்டிருப்பவர்.லெப்பையோ குளத்துக்கு போய் மீன் பிடித்து கொண்டு வந்து அதை ஒரு புறம் மட்டும் சுட்டு சாப்பிடுபவர்.ஒரு புறம் சாப்பிட்ட பின்னரே மறு புறத்தை சுட ஆரம்பிப்பார்.ஏனெனில் அதற்கு முன்னால் இஸ்ராயீல் வந்து விட்டால் சுட்டது மீந்து போகுமே..அதனால் தான் அந்த ஏற்பாடு.மக்கிடி லெப்பையின் பிரதான விளையாட்டு என்பது தூக்கிட்டு தொங்குவது தானாம்.ஆங்காங்கு இருக்கும் பெரிய மரங்களில் கழுத்தில் தூக்கு போட்டு தொங்கி கிடப்பாராம்.திருவனந்தபுரத்திலும் பல கடைகளுக்குள்ளும் தூக்குப் போட்டு கிடப்பாராம்.கடை திறக்க வருகிறவர் திறந்து பார்க்க உள்ளே லெப்பை தூக்கில் தொங்குவாராம்.பகல் முழுதும் வருகிறவன் போகிறவன் என எல்லோரையும் கண்டமேனிக்கு திட்டி வசை பாடுவாராம்..இரவில் தூக்கு போடும் விளையாட்டு.அசிங்கமாக திட்டுவதனால் யாரும் நெருங்க மாட்டார்கள்.நடு சாமத்தில் எவனாவது அவரை நம்பி காத்திருந்தால் அவனுக்கு மெய் உபதேசம் பண்ணுவாராம்.யாரும் இறக்கி விடவில்லையெனில் ஏழு நாட்கள் வரை தூக்கில் தொங்குவாராம்.இறக்கி விட்டால் ..நிம்மதியாக தூங்கவும் விட மாட்டார்களே..என புலம்பிக் கொண்டே செல்வாராம்.

ஒருமுறை கடுமையான மழை..வாரக்கணக்கில் மழை நீடித்துக் கொண்டிருந்தது.வள்ளியாற்றில் இருகரையும் புரண்டு தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.லெப்பையை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த என் தாத்தா அப்படியே நின்று விட்டார்.ஏனெனில் அவ்வளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.பிரம்மாண்டமான மரங்கள் கூட துரும்புகளைப் போல ஆற்றில் அடித்து செல்லப் பட்டு கொண்டிருக்கின்றன.இன்று காணும் பாலம் அன்று கிடையாது.ஆற்றைக் கடக்க சப்பாத்து தான் இருத்தது.இன்றும் இந்த சப்பாத்தின் எச்சங்களை காணலாம்.மழை காலங்களில் சப்பாத்து மூழ்கி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.இக்கரை உள்ளவர்கள் அக்கரை செல்ல முடியாது.இப்படியான அவத்தையில் தான் லெப்பையும் தாத்தாவும் வந்து மாட்டிக் கொண்டனர்.

லெப்பை சுற்று முற்றும் பார்த்தவர் ஓர் காட்டு சேம்பின் இலையை பறித்து தண்ணீரில் போட்டார்.சேம்பிலை தண்ணீரில் அடித்துச் செல்லாமல் மரக்கட்டை போன்று மிதந்து நின்றது.லெப்பை அந்த இலை மீது ஏறினார்.திரும்பிப் பார்த்து அனத்தம் பிள்ளையே வாரும் என்று கூறி கையை நீட்டினார்.அனத்தம் பிள்ளை பயத்தினால் பின் வாங்கினார்.லைப்பை அந்த இலையையே தோணியாக்கி அக்கரைக்கு பிரயாணமானார்..அனத்தம் பிள்ளையர் கண் எதிரிலேயே அக்கரையில் மஸ்துஜில் ஹறாம் தென்பட்டது..லெப்பை மஸ்துஜில் ஹராமுக்குள் கயறி சென்று விட்டார்.இக்கரை நின்றவர் கதை இக்கரையிலேயே முடிந்தது.ஒரு கண நேரம் குருவின் மேல் இருந்த நம்பிக்கையினை இழந்தவர் வாழ்வின் பொன்னான வாய்ப்பினை இழந்து போனார்.

Wednesday, October 11, 2023

வைராக்கியம்2

 ஒரு யோகியின் சுய சரிதை எனும் நூலை பலபேர் படித்திருப்பீர்கள்.யோகானந்த பரமஹம்ஸர் அதில் இமயமலையின் ரகசியமான ஓர் குகையில் பாபாஜியுடன் இருந்த போது நடந்த ஒரு நிகழ்வை விளக்குகின்றார்.

இதே குகையில் தான் யோகானந்தரின் குருவான லாகிரி மகாசயர் பாபாஜியிடம் தீட்சை பெற்று தியானத்தில் ஆழ்ந்தார்.லாகிரி பிரிட்டீஷ் காலத்தில் ரயில்வேயில் பணிபுரிந்தவர்.ஒருநாள் எதிர்பாராத விதம் அவருக்கு ராணிகஞ்ச் எனும் இமயமலை சாரலுக்கு பணிமாற்றம் நிகழ்ந்தது.அங்கே தான் பாபாஜியை காணும் பாக்கியத்தை லாகிரி பெற்றார்.ஏதோ ஓர் ஈர்ப்பினால் கவரப்பட்ட லாகிரி நடக்க ஆரம்பித்தார்...தூரத்தில் ஓர் சிறுவன் இவரை நோக்கி நிற்பதை கண்டார்.அவனை நெருங்கிய லாகிரியை அச்சிறுவன் அன்புடன் வரவேற்று ..வா வா லாகிரி என கூப்பிட்டு இந்த குகைக்கு அழைத்து வந்திருந்தார்.உள்ளே சுருட்டி வைக்கப் பட்டிருந்த மான் தோல் விரிப்பும் பக்கத்தில் ஓர் கமண்டலவும் இருந்தன.சிறுவன் லாகிரியை நோக்கி ..அங்கே பார் லாகிரி ..உன் கமண்டலவும் விரிப்பும்..நீ வைத்தபடியே அப்படியே இருக்கின்றன என்கின்றான்.அதைப் பார்த்த கணத்தில் லாகிரியின் சித்தத்தில் மாபெரும் ஓர் வெடிப்பு ஏற்படுகின்றது.யுகாந்தரங்களுக்கு பின்னால் அவர் நினைவு பாய்கிறது...அங்கே அந்த குகையில் கோடானு கோடி காலங்களுக்கு முன்னால் தன் குருநாதரிடம் தீட்சை பெற்ற நினைவு திரும்ப வருகிறது..சிறுவனோ லாகிரின் நினைவுகளில் புகுத்து ...எத்தனைகோடி ஜென்மங்கள் கடந்து விட்டிருக்கின்றன..உனக்காக நான் இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.கண் திறந்து பார்த்த லாகிரி தன்முன்னால் சிறுவனாக நிற்கும் தன் குருநாதரை அடையாளம் கண்டு கொண்டு சாஷ்ட்டாங்கமாக விழுந்து பணிகிறார்.

அதே குகையில் பாபாஜி முன்னால் யோகானத்தர் உட்கார்ந்திருக்கிறார்.அப்போது அங்கே ஓர் மெலிந்த உடலமைப்பு கொண்ட ஒருவர் வலிந்து வருகின்றார்.பாபாஜியின் பக்கத்தில் அனேகம் பேர் ஆழ்ந்த சமாதியில் அமர்ந்திருக்கின்றனர்.வந்தவர் பாபாஜியை பணிந்து வணங்கி தன்னையும் சேர்த்துக் கொள்ள மன்றாடுகின்றார்.ஆனால் கருணையற்ளவர் போல பாபாஜி அவரை மறுக்கின்றார்.கடைசியில் வந்தவர் தன்னை சேர்த்துக் கொள்ளவில்லயெனில் இந்த மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொள்வேன் என மிரட்டல் விடுக்கிறார்.பாபாஜியின் முகத்தில் எந்த சலனமும் இல்லை..முகம் பாராமல் இருந்துவிட...வந்தவர் திடீரென அதளபாதாளமான பள்ளத்துக்கு குதித்து விட்டார்.அனைவரும் தம்பித்து போய்விட்டனர்..பாபாஜியைத் தவிர.மவுனமாகவே இருந்த பாபாஜி சொன்னார்..அவன் எத்தனையோ ஜென்மங்கள் இங்கே மறுபடியும் மறுபடியும் கடினமான பிரயாசைகள் பட்டு வந்து கொண்டே இருந்தவன் தான்..ஒவ்வொரு முறை வரும்போதும் அவனை சேர்த்துக் கொள்ள மறுக்கும் போதும் கொஞ்ச நாள் கழித்து போய் விடுவான்.அப்படி பல ஜென்மங்களை வீணாக கழித்மு விட்டிருக்கின்றான். இப்போது தான் அவனுக்கு வைராக்கியம் வந்திருக்கின்றது..செல்லுங்கள் ..சென்று அவனுடைய சிதறுண்னு போன உடல் பாகங்களை கொண்டு வாருங்கள் எனச் சொல்லி அந்த நபரை உயிர்ப்பித்து சீடனாக்கி அருள் புரிந்தார்.யோகானந்தருக்கு அப்போது தான் புரிந்தது குருவின் திருவிளையாடல்கள்.வைராக்கியம் இல்லாதவனுக்கு வித்தை பாழ்.ஒவ்வொன்றுக்கும் அதற்கான விலை உண்டு.ஒன்றை இழக்காமல் மற்றொன்றை பெற்றுக் கொள்ள முடியாது என்பது ஆன்மீக நிதர்சனம்.ஆணவம் இழக்காமல் ஞானம் வராது.உடலை இழக்காமல் உயிரை பற்றிக் கொள்ள இயலாது.தன்னை இழந்து போகையில் ஒருவன் தன்னை காப்பாற்றி கொள்கிறான் என்பதை கிறிஸ்துவும் சொல்கிறார் என்றால் அதன் உட்கிடை புரிதல் வெகு துல்லியமானது.


வைராக்கியம்

 ஒரு சின்ன கதை பார்ப்போம்.

ஒரு குருவிடம் பலபேர் சீடர்களாகி பயின்று வந்தனர்.ஒரு நாள் புதிதாக ஒரு மாணவன் கற்கும் ஆவலில் வந்து சேர்ந்தான்.அருமையான சுறுசுறுப்புள்ளவன் தான்.கொஞ்ச காலம் சென்றது.குருவும் பலவித போதனைகளை செய்து கொண்டிருந்தார்.சீடனும் சிரத்தையுடன் பயின்று கொண்டிருந்தான்.

ஒருநாள் குருவானவர் சீடனிடம் தினமும் ஓர் தேங்காய் கொண்டு வர சொன்னார்.சீடனும் அதை சம்மதித்து தினம் ஓர் தேங்காய் கொண்டு வந்தான்.சிலநாள் சென்றபோது அவனுக்கு தேங்காய் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.யோசித்துப் பார்க்க என்ன செய்வது என அவனுக்கு குழப்பம் ஏற்பட்டது.அக்கம் பக்கத்தில் பலபேருக்கு சொந்தமான தெனந்தோப்புகள் பல இருந்தன.தினம் ஒரு தேங்காய் திருடுவதனால் ஒன்றும் ஏற்படப் போவதில்லை,யாரும் சீக்கிரம் கண்டு பிடிப்பதும் இல்லை எனும் நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோப்பில் இருந்தும் ஒரு தேங்காய் எனும் கணக்கில் பறித்துக்கொண்டு குருவுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான்.

குருவோ சொன்னது மட்டுந்தான்,இவன் கொண்டு வருகிறானா என ஒன்றும் அவர் கண்காணித்துக் கொண்டிருக்கவில்லை.அவர் அவர் பாட்டுக்கு அவருடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்.கொஞ்ச காலம் சென்றது.சீடன் திருடுவதில் தேர்ந்து விட்டிருந்தான்.இப்போது இவனுக்குள் ஓர் எண்ணம் தோன்றியது, நாம் எதற்கு ரெம்ப கஷ்ட்டப்பட்டு தேங்காயை திருடி குருவுக்கு கொடுக்க வேண்டும்? அவர் தேங்காய் கொடுப்பதை கண்டு கொள்வதே இல்லை.நாம் கொடுக்காமல் இருந்தாலும் அவர் கண்டு கொள்ளப் போவதில்லை எனும் முடிவுக்கு வந்து விட்டான்.அன்றிலிருந்து குருவுக்கு தேங்காய் கொடுப்பதை நிறுத்திக் கொண்டான.

பல தோப்புகளில் இருந்து ஒவ்வொரு தேங்காய் பறித்தவன் இப்போது குலை குலையாக திருட ஆரம்பித்தான்.இப்படி குருவையும் ஏமாற்றி,தன்னையும் ஏமாற்றிக் கொண்டு பெரும் திருடனாக மாறிக் கொண்டான்.அவனுடைய சுய இருப்பு சுயமாக மலர்ந்தது.இவன் ஆசிரமத்துக்கு வராமல் இருக்கிறானே என குரு கவலைப்பட்டதே இல்லை.

தேட்டம்

 "நாட்டமிரண்டும் நடு மூக்கில் வைத்திடில்

வாட்டமுமில்லை மனைக்கும் அழிவில்லை

ஓட்டமுமில்லை உணர்வில்லை தானில்லை

தேட்டமுமில்லை சிவனவனாமே"

=திருமந்திரம்.

தேட்டம் என்றால் தேடுதல் எனப் பொருள்.இந்த தளத்தின் முதல் அறிவிப்பாக வைக்கப்பட்டிருக்கும் கருத்து என்பது," தேடுபவனும் தேடப்படுபவனும் இங்கு இல்லாத போது தேடுதல் என்பது தேவையற்றது எனத் தெளி" என்பதுவாகும்."இங்கு" என இங்கே குறிப்பிடுவது தற்பொழுதை குறிக்காது."இங்கு" என்பது மனதின் ஓர் உன்னத நிலை.அதாவது "இக்கணம்" எனும் அவத்தையில் மனம் விளங்கும் பொழுதையே அது குறிக்கின்றது.மனதில் கடந்த காலமோ அது குறித்தான எண்ணங்களோ இன்றியும்,எதிர் காலமோ அதன் கற்பனைகளோ ஏதுமின்றியும் விளங்கும் நிலை.இதனை வடமொழியில் வர்தமான காலம் என்பார்கள்.அதனால் தான் மகாவீரரை வர்தமானர் என அழைக்கிறோம்.அதாவது சதா நிகழ்காலத்தில் விளங்குபவர்கள் எனப்பொருள்.மனம் எப்போதும் கடந்த காலத்திலோ அல்லது எதிர் காலத்திலோ நிகழ்ந்தவற்றையோ அல்லது நிகழப்போகின்றவற்றையோ பற்றியே உலா வரும்.எப்பொழுது நிகழ்காலத்துக்கு வருகின்றதோ அப்போது மனமற்றுப் போகின்றது.

அடுத்ததாக வருவது,"தேடுபவனும் தேடப்படுபவனும்". அதாவது தியானிப்பவனும் தியானிக்கப்படுபவனும் எனக் கொள்க. இதன் ஊடாக நிகழ்வது தியானம் என்பதுவாகின்றது.தியானம் என்பது தேட்டமாக இருக்கின்றது.தியானிப்பவனும் தியானிக்கப்படுபவனும் அற்றுப் போகும் போது கூடவே தியானமும் அற்றுப் போகிறது.ஏனெனில் அங்கு தேடுதல் முடிந்து போகின்றது.அந்த நிலையே "இக்கணம்".



Tuesday, October 10, 2023

மந்திரம்

 மந்திரம்:" நாகர்மணா நப்ராஜாய தானேன த்யகே நைகே அம்ருதத்வா மனஸுஹு பரேண நாகம் நிஹிதம் குஹாயாம் விபிராஜ தேதத் யதயோ விசந்தி"



‘அக்னிஹோத்ரா’ போன்ற கர்மாக்களை வருடக்கணக்கில் ஒன்றாகச் செய்வதால் முக்தியை அடைய முடியாது.” பிரஜயபித்ருப்யஹா” என்கிறது ஸ்ருதி. 

பிள்ளைகள் கடனில் இருந்து விடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால் குழந்தைகளால் கூட முக்தி கொடுக்க முடியாது. தர்மத்தில் கொடுக்கப்படும் பணம் பல நன்மைகளை வழங்குவதாக கூறப்படுகிறது, "தனே சர்வம் ப்ரதிஷ்டிதம் தஸ்மாத் தானம் பரமம் வதந்தி" அதுவும் முக்தியை வழங்காது. 

எனவே, இந்த பொதுவான உலகச் செயல்களையெல்லாம் கைவிட்டு, தங்கள் கவனத்தை உள்நோக்கித் திருப்புபவர்களுக்கு மட்டுமே முக்தி சாத்தியம் - இந்திரியத்தின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டவர்கள், ஸ்வர்கம் அல்லது சொர்க்கத்தை விட உயர்ந்த மோட்சத்தைப் பெறுவார்கள்.



ஞான சன்யாசர் துறவறத்தை அடைவதும் மோட்சத்தை அடைய உதவுகிறது


=நாராயண பிரஸ்னம்

*சித்திரை திருநாள் இரகசியம்*

 *சித்திரை திருநாள் இரகசியம்*


தவசீலர்களுக்கு ஆத்ம வணக்கம்!


தமிழ் வருடம் என்பது சித்திரையில் துவங்கி பங்குனியில் முடிவது. சூரியனின் நீள்வட்டப்பாதையை (elliptical) பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்து , ஒவ்வொரு பகுதியையும் ஒரு ராசியாக கணக்கிட்டு மேஷம் முதல் மீனம் வரை சூரியனின் சுற்றுவட்டப்பாதையைக் கணித்திருக்கிறார்கள் நம் சித்த குருமார்கள்...


சூரியன் மேஷராசியில் நுழையும் நாள் சித்திரை அதாவது ஆண்டுத் துவக்கம், மீன ராசியிலிருந்து வெளியேறும் நாள் பங்குனி முடிவு. அதாவது ஆண்டின் முடிவு.


*_சித்திரை மாசம் ஏன் தமிழ் மாதத்தின் முதல் மாதமாக இருக்க வேண்டும்?_*


சூரியனின் ஒளிகிரணங்கள் அதிகமாக இருக்கின்ற நாட்கள் சித்திரை மாதத்தில் தான். சூரிய ஒளி கிரணங்கள் அதிகமாக இருக்கிற மாதம் சித்திரை மாதம். அதாவது சூரியன் தனது சொந்த வீட்டில் மேஷ ராசியில் இருப்பது சித்திரை மாதம்.


ஒளி கிரணங்கள் அதிகமாக இருக்கிற காரணத்தால் இதை சித்தர்களோட விழாவாக, சித்தர்கள் விழா என இந்த மாதத்தின் முதல் நாளைக்கொண்டாடுகிறார்கள்.


*_சித்திரை என ஏன் பெயர் வந்தது?_*


நமது தேகத்தில் உயிர் பொருள் ஒன்றிருக்கிறது இதற்கு *"சித்"* என்று பெயர்"; ஆன்ம பொருளுக்கு *"சத்"* என்று பெயர். இந்த உயிர் பொருள் ஆன்ம பொருளாக மாற முடியாமலிருப்பதற்கு இடையிலே ஒரு *"திரை"* இருக்கிறது. உயிர்பொருளிலுள்ள மலத்தை, அசுத்தத்தை நீக்கி அந்த திரையை பயிற்சிமுறைகளால் நீக்கத்தெரிந்தால் உயிர் பொருளே ஆன்ம பொருளாக மாறுவதற்கு ஒரு வாய்ப்பு வந்துவிடும். ஆன்மாவாகிய சத்தை காணவிடாமல் சித்தாகிய உயிரை மறைத்துக்கொண்டிருக்கும் திரையை விலக்குவதற்கான நாள் தான் *"சித்திரை திருநாள்".*


இதனை ஏன் *"சித்திரை விஷு"* என்று சிறப்பாக சொல்லக்காரணம் என்னவென்றால் விஷு என்றால் (visual) பார்ப்பது எனப்பொருள். பல ஆங்கில சொற்கள் தமிழ் கலைச்சொற்களிருந்து தான் சென்றிருக்கிறது.


_எடுத்துக்காட்டாக:-_


விஷு - Visual

மாதா - வடமொழியில் மாத்ரு எனத் திரிந்து பின்பு Mother என மாறியிருக்கிறது - பிதா என்பது வடமொழியில் பித்ரு எனத்திரிந்து Father என மாறியிருக்கிறது

ஹோரை - என்பதே மருவி "Hour" ஆகியிருக்கிறது

எனவே விஷூ என்றால் காண்பது என்றுபொருள்,


எதைக் காண்பது???


இந்த *சித்தாகிய உயிர் பொருளிலுள்ள திரையை விலக்கி ஆத்மாவாகிய மெய்பொருளைக் காண்பதற்கான வசந்தகாலப் பண்டிகையே சித்திரை விசு.*


தமிழ்நாட்டில் நாகர்கோவில், மற்றும் கொங்கு மண்டலத்திலுள்ள ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களில் மற்றும் கேரளாவிலும் இன்றைய தினத்தில் "சித்திரை கனி" எனும் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. அதிகாலையில் அந்த வீட்டிலுள்ளவர்களைக் கண்ணைத் திறக்காமல் கூட்டிக்கொண்டு போய் கண்ணாடியின் முன்பு நிறைய பழங்களை வைத்து அப்பழங்களை கண்ணாடியின் வழியாக பார்க்கச்சொல்கிறார்கள். இந்த கனிகாணும் நிகழ்வுக்குப் பின்னால் ஒரு ஞான சூட்சும பயிற்சி முறையையே மறைமுகமாகக் கற்றுத்தருகிறார்கள் நமது சித்தகுருமார்கள்....


நமது பிண்டமாகிய உடலிலும் *_"கண்ணாடி"_* ஒன்றிருக்கிறது...... இந்த கண்ணாடி இப்பொழுது நமக்கு ஆடிக்கொண்டிருக்கிறது, இக்கண்ணாடியை முதலில் ஆடாமல் நிறுத்தப் பழக்கிக்கொண்டு இதன் வழியாக நமக்குள்ளிருக்கும் ஆத்மனாகிய *_"ஞான"_* பழத்தை தரிசிக்க முடியும். பழம் என்றால் *_"பழமையான பொருள்"_* என அர்த்தம்... இதனையே


*கண்ணாக்கு மூக்கு செவி ஞானக் கூட்டத்தில்*

*பண்ணாக்கு வைத்த பழம் பொருள் ஒன்றுண்டு*

*அண்ணாக்கினூடே அகண்ட வொளி காட்டி*

*பண்ணாக்கி நம்மைப் பதித்தவரே...* - என


சித்தர்கள் சொல்கின்றனர் . அந்த பழம்பொருளை பார்க்க வேண்டியதின் அவசியத்தை சூட்சுமமாக நமக்கு புரிய வைப்பதற்குத்தான் கணிகாணும் பண்டிகை.


சித்த புருஷர்கள் நமக்கு சூட்சுமமாகக் கருணையோடு கொடுத்த இந்த சிறந்த நாளைத்தான் *"சித்திரை திருநாள்"* என்றும் சித்திரை விசு என்றும், *"தமிழ் புத்தாண்டு தினமாகவும்"* கொண்டாடுகிறோம். நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்குள்ளும் ஆன்ம இரகசியம் புதைந்திருக்கிறது, சிந்தித்தால் ஞானம் பிறக்கும். சிந்திப்பவனே மனிதன்..


உங்கள் அனைவருக்கும் எனது சித்திரை விஷு தின வாழ்த்துக்கள். 



*சிலை வழிபாடு அவசியமா இல்லையா?*

 *சிலை வழிபாடு அவசியமா இல்லையா?*


எல்லா மதங்களிலும் சிறு வயது முதல் சாகும் வரை எல்லோருக்கும் வழிபாடு என்று ஒன்று எடுத்து வைத்தது எதற்கு?

இறைவன் திருவடி சென்று அடைவதற்கே என்று எல்லா வேதங்களும் ஒத்துக் கொள்ளுகின்றன.


சிலை வழி பாட்டின் அவசியம் என்ன?

நாம் சொல்லும் கோவில் மனிதன் உண்டாக்கியது.அந்தக் கோவிலில் உள்ள சிலையை உண்டாக்கியதும் மனிதனே.எனவே மனிதன் உண்டாக்கிய பொருளுக்கு யார் ராஜா?கட்டாயம் நாம் உண்டாக்கியது நமது கட்டுப்பாட்டிற்கு உள்தானே இருக்கும்.


இப்போ இந்த சிலையை மக்களாகிய நாம் அனைவரும் தெய்வம் என்று வணங்குகின்றோம்.என்ன காரணத்திற்காக?

அதில் காயத்திரி மந்திரம் ஓதி உரு ஏறி இருப்பதாக நமக்கு சொல்லி வைத்தார்கள்.

இங்கே வேதம் ஒரு கேள்வி எழுப்புகின்றது.காயத்திரி மந்திரம் ஓதியதால் உரு ஏறிய இந்த சாதாரண கல் தெய்வம் ஆகிற்று என்றால்,இதனை ஓதிய அய்யர் தெய்வத்திற்கும் தெய்வமாகி இருக்க வேண்டும் அல்லவா?அப்படி ஆகிற்றா?இல்லையே அப்போ இந்தக் கல் தெய்வம் ஆகியிருக்குமா இல்லையா என்பதனை அவர் அவர் யோசனைக்கு விட்டு விடுகின்றேன்.


இந்தச் சிலையும் நீங்களும் ஒன்றாக நின்று கொண்டிருக்கும் பொழுது ஒருவர் கட்டை எடுத்து உங்கள் இரண்டு போரையும் அடிக்க ஓடி வருகின்றார்,நீங்கள் என்ன செய்வீர்கள்?

ஒன்று தடுப்பீர்கள் இல்லையெனில் ஓடி ஒளிந்து கொள்வீர்கள்,ஆனால் பாவம் அந்த சிலை என்ன செய்யும்?அசையாமல் ஒரே இடத்தில் நிற்கும்.


ஏன்?

உங்கள் உள் மனதில் ஓடும் பதிலை நான் இங்கே போடவா?

அதுக்குத்தான் உயிர் இல்லையேங்க.


ஓ அப்போ அது நம்மை விட மட்டமானதுதானா?

நமக்கு உசிர் இருக்கு அதுக்கு இல்லை.

அதால தன்னையே காப்பாற்றிக்க முடியாத நிலையில் தங்களை எப்படி காப்பாற்றும் அய்யா?


ஆனால் அந்த எல்லையில் உங்களை காப்பாற்றியது யார்?

என்ன சந்தேகம் அய்யா,கடவுள்தான் 

என்னது கடவுளா,நான் ஏதும் பார்க்கலையே என்று மலைக்கிண்றீர்களா?

கடவுள் = கடம் + உள் கடமாகிய உங்கள் உடலின் உள்ளே இருந்து ஒரு ஓசை வந்து "டேய் பாருடா உன்ன அடிக்க ஓடி வரான்,ஓடு " என்று எது உஜார் படுத்தியது?அந்த உயிராக நமது உடம்பினுள் இருப்பது இறைவன்தான்.


இப்போ ஒரு கேள்வி எழும் எல்லோருக்கும்.

கால காலமாக நமது மூதாதையர்கள் கும்பிட்டு வந்த சிலை வழிபாடு தவறா?

அது தவறு கிடையாது.அது ஒரு ஆரம்ப கல்வி நிலை ஆன்மீகத்தில்.அவ்வளவே.அதற்கு பின்னர் ஆன்மீகத்தில் நாம் போயி பட்டம் வாங்க வேண்டாமா?


ஒரு சிறு குழந்தை பள்ளிக் கூடத்தில் யானையை ஒரு பொம்மையை காட்டியும் ஒரு படத்தை காட்டியும் விளக்கி தருவார்கள்.அதற்காக அது நிஜ யானை ஆகிவிடுமா?ஒரு நாள் சுற்றுலா கூட்டி சென்று ஜூவில் நிஜ யானையை காண்பிக்கும் பொழுதுதான் அதன் கல்வி நிறைவு பெறுகின்றது.அப்போதான் அந்த பிள்ளைக்கு தெரியும் நாம் இதுவரை கண்டது நகல் அசல் இதுதான் என்று.


அது போல சிறு பிள்ளைகளுக்கு தெய்வம் என்று ஒன்று உண்டு என்பதனை கற்பிக்க வந்ததே சிலை வழிபாடு.


நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும் பொழுது மணலில் வீடு கட்டி விளையாடுகின்றோம்,பெரிதான பிறகு அதிலா போயி குடியிருக்கின்றோம்?நிஜ வீட்டிற்கு செல்லுகின்றோம் அல்லவா?

சிறு வயதில் சோப்பு சாமான்களை வைத்து சமையல் செய்து விளையாடுகின்றோம்,பெரிதான பிறகு அதிலா சமைக்கின்றோம்?

நிஜமான பாத்திரத்திற்கு செல்லுகின்றோம் அல்லவா?

சிறு வயதில் பொம்மைகளை வைத்து அப்பா அம்மா விளையாட்டு விளையாடுகின்றோம் பெரிதானவுடன் நிஜமான ஒரு மனைவியை நாம் மணம் முடித்து அல்லவா குடும்பம் நடத்துகின்றோம்?


அது போல சிறு பிள்ளைக்கு என்று வந்த சிலை வழிபாட்டில் மட்டும் இன்னும் மனிதன் அறிவு பருவம் வந்தும் இந்த பொம்மையை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தால் நிஜமான இறைவனை இவன் கண்டறிவது எப்போ?


ஞானிகள் சிலை வழிபாட்டை என்றும் ஆதரிக்கவில்லை:


நட்ட கல்லைத் தெய்வமென்று 

நாலு புஷ்பம் சாற்றியே 

சுற்றி வந்து முணுமுணுத்து 

சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ 

நாதன் உள்ளிருக்கையில் 

சுட்டச் சட்டி சட்டுவம் 

கறிச்சுவை அறியுமோ?

- சிவவாக்கியப் பெருமான்


ஞானிகள் கோவில் கோவிலாக சுற்றுங்கள் என்று சொல்லவில்லை:


"வீணான பயல்களுட மார்க்கங் கேளு

வெளியிலுள்ள கோவிலுக்குள் பூந்து பூந்து

கோணாமற் கும்பிடுவார் ஒன்றுங் காணார்

குறும்பரவர் அலைகின்ற மார்க்க மேதோ

நாணாமல் நாணுகின்ற மடையரப்பா

நாய் போலத் திரிவார்கள் தளங்கள்தோறும் 

தோணாது முழுகுவார் தீர்த்தமென்று

துறையேதுங் காணாத மடையர்தானே "


- திருவள்ளுவப் பெருமான் (திருவள்ளுவர் 300 என்ற நூலில் இருந்து)


எல்லா வேதங்களும் இறைவனை நம் அகத்தினுள் தான் தேட சொல்லுகின்றது:


உடம்பினை பெற்ற பயன் ஆவதெல்லாம் உடம்பினுள் உத்தமனை காண்.

- ஒளவையார் 


சத்திய வேதம்:

நீங்கள் தேவனுடைய ஆலயமாய் இருக்கிறீர்கள் என்றும்,தேவனுடைய ஆவி உங்களில் வாசமாய் இருக்கிறாரென்றும் அறியாதிருகிறீர்களா?

(கொரிந்தியர் 1-நிருபம்-3:16)


திருக்குரான்:


மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்;அவன் மணம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்;அன்றியும் பிடரி நரம்பைவிட நாம் அவனுக்குச் சமீபமாகவே இருக்கிறோம்.(50:16)


நீங்கள் எங்கிருந்த போதிலும் அவர் உங்களுடனே இருக்கிறார்-அன்றியும் அல்லா நீங்கள் செய்வதை உற்று நோக்கியவராக இருக்கிறார்.(57:4)


சிலையை வழிபடுவது பாவம்.ஏன்?


எல்லா வேதங்களும் இறைவன் நமக்குள்ளே இந்த உடலின் உள்ளே குடி கொண்டிருக்கின்றார்கள் என்று கூற,இந்த சிரசின் உள்ளேதான் அவர்களுடைய பூரண குடியிருப்பு என்று கூறி இருக்க,ஈசன் குடி கொண்டிருக்கும் இந்த சிரசினை ஒரு ஜடப் பொருளாகிய கற் சிலையின் முன்னாள் மண்டியிட்டால் நாம் யாரை மண்டியிட செய்கின்றோம்?இறை சொரூபத்தையே ஒரு ஜடப் பொருளுக்கு தலை வணங்க செய்ய வைப்பதால் வந்தது இவன் தலைக்கு தீ.இறுதியில் இதன் காரணமாகவே தீட்டாகி நாரி புழுத்து போகின்றான்.அப்போ வேதத்தின் இலக்காகிய நிஜ இறைவனை எட்டாதவர்களையே "தவறி விட்டான்" என்ற நாமம் கொண்டு அழைத்தனர்.நிஜ இறைவன் உள்ளே குடி இருக்க அவரை விட்டு வெளியில் இருக்கும் பொருளுக்கு மதிப்பு கொடுத்ததினால் வந்தது இந்த இழி பட்டம்.


இறுதியாக இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது என்ன?

நமது அகத்தின் உள்ளே உள்ள இறைவனை அறிவதே மெய் வழிபாடு.இந்த மெய்வழிபாட்டின் மூலம்தான் ஒருவர் மரணத்தை வெல்ல முடியும்.இது நம்மால் மட்டும் ஆகக் கூடிய காரியம் அல்ல.அதற்கு ஒரு மெய் குருபிரான் அவசியம்.அப்பேற்பட்ட மெய்குருபிரான் எங்கே என்று மலைக்க வேண்டாம்.மெய்வழிச்சாலைக்கு விஜயம் செய்யுங்கள்.

இங்கே உள்ள அனந்தர்கள் நிஜ இறைவனை தங்களுக்குள்ளே நிஜமாக தரிசித்தவர்கள்.மேலும் இன்று சென்று சேரும் அன்பர்களாக இருந்தாலும் ஆண்டவர்களின் அருளினால் அங்கே எல்லோரும் மரணத்தை வெல்லுகின்றார்கள்.இது எல்லாம் எப்படி என்கின்றீர்களா?


இறைவனே இறுதி தீர்ப்பினை நடத்த இங்கே மனு அவதாரம் பூண்டு,நமக்கு சற்குருவாக "பிரம்மோதய மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் " என்ற நாமம் பூண்டு எழுந்தருளி எல்லோரையும் மோட்ச சாம்ராஜ்ஜியத்திற்கு ஆக்கி கொண்டிருக்கின்றார்கள்.அவர்களே எல்லா சமயங்களும் எதிர் பார்த்த இறுதித் தீர்ப்பர்.இறுதி மெசியாவென்றும்,மகதி அலைகிஸ் சலாம் என்றும்,கல்கி என்றும்,மைத்ரேய புத்தர் என்றும்,வைகுண்டர் என்றும்,வீரபோக வசந்தராயர் என்றும் அஹூர் மஸ்தாவென்றும் வெவ்வேறு நமங்கலாளால் எதிர்பார்க்க பெற்ற இறுதி தீர்ப்பர் வந்தாயிற்று.வாய்ப்பை நழுவ விட்டு விடாதீர்கள்.


எனவே குருவை போற்றி குடி ஓங்கி வாழ்வோமாக.


இதனை நம்ப வேண்டாம்,நேரில் சென்று ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளுங்கோ.

உடம்பை மறைய வைக்க முடியுமா

 கேள்வி: உடம்பை மறைய வைக்க முடியுமா? 


பதில்: ஏன் நாம உடம்பு இல்லேன்னு தெரிஞ்சா போதாதா? 


கேள்வி: வசிஷ்டர், விஸ்வாமித்திரர் மாதிரி அந்தர்கதமா முடியுமா? 


பதில்: இதெல்லாம் ஸ்தூல விஷயம்.


அதுதான் முக்யமா? 


நாம ஆத்மாவாச்சே! இதைப் பத்தியா கவலைபடறது!


சாரத்தை எடுத்துக்கொண்டு சக்கையைத் தூக்கிப் போட்டுடனும்! 


உடம்பு மறைஞ்சாத்தான் முக்தின்னு சொல்றவா.... தவறாப் புரிஞ்சிகொண்டிருக்கா. உண்மையிலேயே அப்படித் தேவையில்லே. 


நாம உடம்பு இல்லே.


அது மறைஞ்சா என்ன... மறையாட்டா என்ன.... இதிலேயெல்லாம் ஒரு சிறப்பும் இல்லே. 


இதிலே என்ன ஏற்றத்தாழ்வு?


ஞானமடையறதுதான் விஷயம். 


“நான்”கறது இல்லாம போறதுதான் முக்கியம். உடம்பு இல்லாம போறது இல்லே. 


நம்மள உடம்போட சம்பந்தப் படுத்திகறதுதான் உண்மையிலேயே பந்தம். 


இந்த அஞ்ஞானத்தைத் தொலைச்சு நாம யாருங்கற ஞானம் ஏற்படறதுதான் ஆத்மா ஞானம். 


அதுதான் முக்யம்.


ஒரு தங்க ஆபரணத்தை சுத்தமான தங்கமான்னு சோதிக்கறதுக்கு... எப்படி உருக்கினா என்ன? 


கொஞ்சமா உருக்கினா என்ன?


மொத்தமா உருக்கினா என்ன?


உருக்கினதுக்கு அப்புறம்... அது முன்னாடி என்ன ஆபரணமா இருந்தது... இதெல்லாமா முக்யம்!


அது தங்கம் தானா? அதுதான் முக்யம் !


செத்தவா யாரும், உடம்பைப் பாக்கப் போறதில்லே.


உயிரோடு இருக்கிறவன்தான், ஞானியோட உடம்பு மறைஞ்சுத்தா... இல்லையான்னு யோசிக்கறான்.


உண்மையை உணர்ந்தவனுக்கு உண்மையிலேயே சாவு கிடையாது. 


உடம்பு இருந்தாலும், உடம்பு இல்லேன்னாலும் அவனுக்கு ஒரு வித்தியாசமும் கிடையாது. 


பிறருக்கு ஞானியின் உடம்பு இருக்கறதனாலேயோ... மறையறதனாலேயோ.. எந்த பிரயோஜனமும் இல்லே..


நாம வந்த வேலையை நாம பாக்கணும்.


முதல்லே ஞானத்தை அடைவோம். 


அப்புறம் எப்படி உடம்பை விடலாம்னு ஆலோசிப்போம்.


‘உடம்புதான் நான்’கற அஞ்ஞானந்தான் இந்த யோசனைக்கெல்லாம் காரணம். 


நீ இந்த உடம்பா? 


தூங்கும்போது இந்த உடம்பு எங்கே?


இந்த யோசனையெல்லாம் எங்கே? 


இப்போ விழிச்சுக் கொண்டவுடனே எது கிளம்பறதனாலே இந்த 


யோசனையெல்லாம் வந்து தொல்லை பண்றது? 


அதுதான் அகந்தை! திருட்டுப் படவா! விரட்டிட்டா சுகமாயிருக்கலாம்.

குண்டலினீயின் ரகசியம் - j

 குண்டலினீயின் ரகசியம் - 

==========================


குண்டலிவாசி அகாரமடி மிடர்கண்டமதில் உகாரமடி உண்டுசுழியில் மகாரம் வைத்தால் சிவ சிந்தையிதல்லவோ ஞானபெண்ணே என பாடுவார்கள் சித்தர் பெருமக்கள்.பலபேருக்கு இது என்ன என்று புரிவதில்லை. குண்டலி என்பது ரெண்டு சக்திகள் சேர்ந்தது ,அகார சக்தியும் உகார சக்தியும். இப்படியான ரெண்டு சக்திகல் நேர் எதிரே எதிரே இயங்கும் இயற்கை உடையன. அதாவது ஒருசக்தியின் தலை மேல் நோக்கி பிரயானம் செய்ய,மற்றைய சக்தி நேர் எதிராக பிரயானம் செய்யும்.அதாவது ஒரு சக்தியின் தலையானது மற்றைய சக்தியின் வாலை கவ்வியபடி இருக்கும். இதை தான் குண்டலினி சக்தியாகிய பாம்பு உருவகம் தன்னுடைய தலையை தானே கவ்வி இருக்கும் என புனையப்பட்டுள்ளது.சக்தி தான் ரெண்டு எனிலும் அதற்க்கு உயிர் ஒன்றே, அதாவது, ரெண்டு சக்திகல் எதிர் எதிர் திசையில் இயங்கும் போது அச்சக்திகளின் மையம் ஒரு சுழலும் அமைப்பாக இருக்கும்.தையே சுழி எனும் உட்புகும் வாசல்.அச்சுழியின் மூலம் இச்சக்திகளின் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். அகாரம் என்பது ஒரு உயிர் சக்தி, அதுபோல உகாரம் என்பதும் ஒரு உயிர் சக்தி.இப்படியான ரெண்டு உயிர்சக்திகல் ஒரு சுழியை மையமாக சுற்றுகின்றன.சீனாவின் லாவோட்சூ எனும் போகமுனிவரின் தாவோ மதத்தின் சின்னமானது இப்படி ரெண்டு சுழல் அமைப்புகள் எதிர் எதிர் திசையில் சுழலும் விதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் என்பதை கவனிக்கவும்.


ரெண்டு சக்திகள் என கொள்ளப்படும் பாம்பானது எதிர்திசையில் சலனத்தை உடையது என பார்த்தோம் அல்லவா...,அது ஒன்று போக்கு எனவும் ஒன்று வரத்து எனவும் உருவகம். அதாவது அமிர்தவும் விஷமும் எனலாம்.இதை சரத்துக்கு உவமானமாகவும் கூறுவர்,ஆனால் சரத்திற்க்கும் குண்டலினிக்கும் வித்தியாசம் உண்டு.சாதாரன கதியில் உட்புகும் வாசியானது விஷமாகவும் வெளிப்புகும் வாசியானது அமிர்தமாகவும் பிரயானம் செய்கிறது. அதனால் ஆயுள் நஷ்ட்டம் ஏற்பட்டு மரனம் உண்டாகிறது.அதை மாற்றும் திறன் குருபிரான் அருளால் உண்டாகிறது.அதையே “ மாற்றிப்பிடிக்கும் வகை அறிவார்க்கு கூற்றை உதைக்கும் குறிப்பதுவாமே “ என மூலர் கூறுவதின் பொருள்.


சொல்லப்படும் வாசியானது ஒவ்வொரு நா்ளைக்கும் மாறி மாறி இயங்கும் தன்மையில் இருக்கிறது.வளர்பிறை தேய்பிறை எனும் கணக்கில் மாறி இயங்கும்.ஒரு சுற்று என்பது ஒரு போக்கு= ஒரு வரத்து சேர்ந்தது.அப்படி ஏழு நாளைக்கு,வாரத்திற்க்கு மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் இருக்கும்.மூன்றரை போக்கும் மூன்றரை வரத்தும் சேர்ந்து மூன்றரை சுற்று குண்டலினீ அமைப்பு என உருவகம். இப்படியான குண்டலினியை மகாரம்மெனும் நடு மய்யத்தில் கட்டப்படும் போது அவை ஒரு நேர்கோட்டில் அமைகின்றன,அதையே சுழிமுனை நாடி என்பார்கள்.அந்த நாடியானது மூலம் முதல் உச்சிவரை ஊடுருவும் தன்மையில் இருக்கும்.சாதாரன முறையில் மூலாதாரம் என்று மலத்துவாரத்தின் மையத்தை கூறுவார்கள்,ஆனால் அப்படி அல்ல. மூலாதாரம் என்பது இப்போது கானப்படும் தூல ஆதாரமான உடம்பு. அனைத்திற்க்கு மூல ஆதாரமாகி இருப்பது இந்த தூல உடம்பே. அனுபவமானது இந்த தூல உடம்பில் இருந்து தொடங்குகிறது. இந்த உடம்பின் அ்கமையத்தையே மூல விந்து என கொள்லவேண்டும்.அந்த மூல விந்துவே மகாரம் எனும் புள்ளி.,சுழியின் நடுக்கண்ணே புள்ளியன ஒளி மையம்.


ஒளிமையமான மகார புள்ளியில் இருந்தே அகார உகார சக்திகள் இயங்குகின்றன.அதனாலேயே மகாரத்தை மெய் என்கின்றனர், புள்ளி வருவது மெய் எனும் ஆதாரம்.ஏனைய பனிரெண்டும் உயிர் இயக்கங்கள்.அப்படி உயிரும் மெய்யுமானது மகாரம்.மெய்யிடம் விலங்குவது விந்து எனும் புள்ளி. அப்புள்ளியானது உயிரேற்றம் பெறும் போது மறைந்து அருவமாக நிற்க்கும். எப்படியெனில் ம்+அ=ம, ‘ம்’ எனும் போது புள்ளி இருக்கும்,ஆனால் உயிரேற்றம் பெற்று விடும்போது ‘ம’ என புள்ளி இல்லாது விளங்கும்.இப்போது ‘ம’ என்பது நாதம் எனப்படுகிறது.அதாவது புள்ளி இருக்கும் போது விந்து எனவும் உயிரேற்ரம் ஆகும் போது நாதமாகவும் திகழும்.


இப்படி முதல் ஆதாரமான தூலத்தை விட்டு உள்முகமாக’ ம்’ எனு ஒளி நிலை பிரயானம் ஆவதையே குண்டலினி ஏறுவது என்பார்கள்.மின்சார ரெயிலில் பயணம் செய்யும் போது வேகம் அதிகமாக அதிகமாக உடலில் ஒருவித உந்து இயக்கம் அதிகரிப்பதை போல, தூல உணர்ச்சியானது சடாரென சுருங்கும். ஆனால் நாம் உனர்வோடுதான் இருப்போம். மனமானது உள்முகமாக ஆமைக்கு உள்வலிவதை போன்று உட்புகும்.இப்படியான இயக்கம் மேலும் மேலும் உள்முகமாக திரும்புவது அனுபவிகள் உணர்வார்கள்.அப்படி சாதனை செய்வதினால் மனம் உள்வயப்பட்டு ஒன்றி நிற்பதையே யோகம் என்பர்.இதுவே குண்டலினீ ரகசியம்.

பிராணாயாமம்

 ஆன்மீகத்தில் மக்கள் பிராணாயாமம் செய்து மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை காணவேண்டும் என்ற முயற்சி செய்வதில் தவறில்லை.  ஆனால் ஞானிகள் இப்பயிற்சியின் உண்மையை பரி பாடலாக எழுதியுள்ளதால் உண்மை ஞானம் அறியாத ஆசிரியர்கள் நூலைப் பார்த்து மூக்கில் வரும் மூச்சைப் பிடித்து செயல்பட செய்வது ஆபத்துக்குரியது என்பதை ஆசிரியர்களும், மாணவர்களும் தெளிவாக உணர்ந்து பழக வேண்டும். 


ஆச்சப்பா இந்த முறைப் பதிணென் பேரும்

அயன்மாலும் அரனோடும் தேவரெல்லாம் 

மூச்சப்பா தெய்வமேன்றே யறியச் சொன்னார்

முனிவோர்கள் இருடியரிப் படியே சொன்னார்

பேச்சப்பா பேசாமல் நூலைப் பார்த்துப்

பேரான பூரணத்தை நினைவாய்க் காரு

வாச்சப்பா பூரணத்தை காக்கும் பேர்கள்

வாசிநடு மையத்துள் வாழ்வார் தானே – அகத்தியர் ஞானம் – 15 


மேற்படி பாடலின் உண்மைப் பொருளை அறியாத ஆசிரிய பெருமக்கள் மூச்சென்று சித்தர் கூறியிருப்பதாக இப்பாடலையே ஆதாரமாக கூறி மாணவர்களுக்கு கற்பிப்பது தவறாகும். மேலும் 


அறிந்து கொள்ளு சித்தருடைய மறைப்பை எல்லாம்

அகாரமுடிதனில் ஏறி உகாரந்தொட்டுச்

செறிந்துபார் இராசலிங்க சொரூபம் தன்னை

சிகாரத்தின் நடுவெறி மகாரத்துள்ளே 

கருவறிந்து கைலைமலை ஏறினாக் கால்

காணுமடா சின்மயம்தான் கார்மேகம் போல் 

புருவநடு முனையாகிச் சுழியும் ஆகிப் 

புகுந்தனடா பரவெளியில் ஞானமுற்றே.  --- என்றும்


இந்த பாடலில் புருவநடு முனை சுழியாகி விளங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.  ஆகவே நடுக்கண் புருவப்பூட்டு என்று வடலூர் வள்ளற்பிரான் கூறியருளியுள்ளது சுழி முனைப்பூட்டு என்கிறது.

இதை ஆசாரியர் அனுக்கிரகத்தால் திறக்கப்பெற்று கொள்வது நலம் என்று கூறுகிறார்.  நெற்றிக்கண், நுதற்கண் என்பதையும் இதனையே ஆகும். 


ஆனால் சுழிமுனை என்பது முதுகெலும்பின் அடிப்பாகத்தில் இருந்து உச்சி வரையில் ஆறு இடங்களில் இருப்பதாக படம் வரைந்து காட்டி ஆயிரக்கணக்கான நூல்களை வெளியிட்டு இருப்பதைக் காண்கிறோம் 


அஷ்டாங்கயோகம், ஆதாரம் ஆறு அவத்தை ஐந்தும் விட்டேறிப் போன வெளி, பரவெளி, சிவவெளி, பெருவெளி முதலிய இரகசியங்களையும் உலகிற்கு முதலிய உணர்த்திய ஆதி பரமகுரு முருகப்பெருமான் ஆவார். 


அதன்பின் அகத்திய மகாமுனிவர், நந்தீசர், புலத்தியர், திருமூலர், பதஞ்சலி முனிவர், போக மாமுனிவர் முதலிய கைலாய பரம்பரைச் சித்தர் மரபினர்கள் இயற்றியருளிய பாடல்களே யோக ஞானத்தின் ஆதாரமாகும். 


இவற்றின் ஆதாரங்களைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கும் பொழுது, யோக ஞானத்தில் இன்றுள்ள நிலையில் உலகில் மேற்குறித்த விபரங்கள் யாருக்குமே தெரியவாய்ப்பில்லை. 


இதை மக்களுக்கு அறிவித்து, ராஜயோகம் என்ற பெயரில் உலகில் இன்று போலிச் சாமியார்களும், யோகி என்று கூறிக்கொண்டு பரப்பிவிட்டிருக்கும் தவறான பயிற்சிகளால் ஏற்படும் கேடுகளில் இருந்து மக்களை விடுவிக்கும் நோக்கத்தோடு இவற்றை தக்க சான்றுகளோடு விளக்கியுள்ளோம். 


யோகப் பயிற்சியின் முடிவும் பயனும் மெய்ஞானம் பெற்றுக் சாகாநிலை அடைதலே பிறவியின் பயனாகும்.  ஆனால் ராஜயோகம் என்ற பெயரால் என்று விளம்பரப் படுத்தப்பட்டிருக்கும், மூச்சுப்பயிற்சியால் நிச்சயம் ஞானம் பெற இயலாது.   இதைப் பொது மக்களும் உணர்ந்து, நம் உறவினர்கள், அல்லது நண்பர்கள் இம்மூசுப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தால், அவர்களுக்கு இந்நூலின் மூலம் விளக்கம் பெறவும், போலி யோகிகளிடம் ஏமாந்து போகாமல் இருக்க உதவ வேண்டும் 


மாண்டுக்கிய உபநிடதம் 


மாண்டுக்கிய உபநிடதப்படி ஆத்மாவாகிய பிரம்மத்திற்கு நான்கு நிலைகள் உள்ளன. 


1. விழிப்புநிலை   -      சாக்கிரதம் (விழிப்பு நிலையில் மனம் செயல்படுவது)

2. சொப்பனநிலை -       கனவு (உறக்க நிலையில் மனம் செயல்படுவது)

3. சுழுத்தி நிலை -       நித்திரை (உறக்க நிலையில் மனம் செயல்படாது 

                                                            இருத்தல்)     

4. துரிய நிலை    -      தன்னுடைய சுயநிலையாகிய ஆன்மா.

                    (விழிப்பு நிலையில் மனம் செயல்படாது இருப்பது – அதுவே தவம்) 


துரிய நிலையில் உள்ள ஆத்மாவுக்கு மற்ற மூன்று நிலைகளும் சொப்பன நிலையாகும்.  இந்த மூன்று நிலைக்குள் உலகம் முழுவதும் அகப்பட்டுள்ளது.  ஆகவே எல்லாம்  பிரம்மம் பிரம்மத்தை சத்தியம் என்போமானால் சத்தியமே சர்வம். 


பிரம்மம்-ஆத்மா- பிராணன்-கடவுள்

ஆத்மாவே பிராணனாகவும், மனமாகவும், புத்தியாகவும், சித்தமாகவும், அகங்காரமாகவும், பஞ்சேந்திரியங்களாகவும் இவைகள் அனுபவிக்கும் உலகங்களாகவும் ஆகின்றது. 


மனம் நான்கு விதமாக திகழ்கின்றது:


1. பஞ்சேந்திரியங்களோடு வியாபாரத்தில் ஈடுபடும் மனம்.

2. மனத்தை அடக்கியாளும் புத்தி 

3. எப்பொருளையும் தனதாகக் கொள்ளும் அகங்காரம் 

4. அதன் சுத்த நிலையாகிய சித்தம் 


இச்சித்தம் தான் இதயத்தில் பிராணனின் உறைவிடம். 


இருக்கும் தன்னுடைய சுயவீடாகிய சித்தத்தில் குடிக்கொண்டிருக்கும் கடவுளிடம் செல்லுவோமானால் விசித்திர அனுபவம் ஏற்படுகிறது.  கடவுளின் அருள் ஏற்படுகிறது. 


இதுதான் உண்மை ஞான அறிவு.  இந்த அறிவால் பிரம்மத்தை அறிந்து கொள்ளலாம்.  எல்லா தத்துவங்களையும் எளிதாக அறியலாம்.  மனம் இப்படி அடிக்கடி கடவுளிடம் போக்குவரத்து வைத்துக் கொண்டு இருக்குமானால் பேரின்பம் உண்டாகும்.  இதனை அடையச் செய்யும் சாதனையே பிராணாயாமம் ஆகும். 


பிராணாயாமம் பற்றி ஞானிகள் கூறும் மெய்ஞான விளக்கம் வருமாறு. 


ஞானவழிவெண்பா – திருமூலர்

நாதவிந்து வென்றும் நடுவனையிலே யிருந்த 

போதமென்று மீண்டும் புகன்றதெல்லாம் ஓதரிய

வாசிக்கே சொன்னா வகையல்லால் வேறன்று 

நேசித்து நீ முனையில் நில். 


நாசிவரும் வாசி நடுவனையிலே மறித்து

ஊசித்துளை வழியே யுள்ளேற்றிப் – பேசும் 

இடமறிந்து சென்றே யெல்லாமும் நீயதுவாய்த்

திடமறிந்து கண்டு தெளி.


கண்டதுண்டந் தானறிந்த காரணராஞ் சற்குருவைத்

தெண்டனிட்டு நின்று தெரிசித்தாற் – றுண்டமதிற்

காலைமே லேற்றுங் கருத்தனைக் – காட்டுவார் 

வேல் முனையைக் கண்டுமே லேற்று. 


உப்பும் புளியும் விட்டு யோகத் திருப்பனென்று 

தப்பிதமா மூச்சடக்கிக் சாகாமற் – றற்பரத்திற் 

பேசாமலே யிருந்தாற் பேரின்பங் காணலாம்

ஆசானைக் கொண்டே யறி.


வாசியென்று மூச்சுதனை வயிறுப்பவே யூதிக்

கூசிமுகங் கோணிக் குருடாவார் நாசிநுனி

தன்னை யறிந்து தவத்தி லிருக்காதார் 

என்ன விருந்து மினி. 


வாசியு மூசியும் பேசி வகையினால்

பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை

ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின் 

ஈசன் இருந்த இடம் எளிதாமே. 


பொருள்: பிராணனையும், சுழுமுனையும் பற்றி பேசியும், பேசுவதோடு அவற்றை நெறிப்படுத்தும் முறையை அறிந்து பிறர்க்கு எடுத்து உரைத்தும் ஒரு பயனையும் அடைய முடியாது.  போருள்மேல் செல்லும் பாசத்தை நீக்குங்கள்.  அவ்வாறு நீக்கின பிறகு ஈசுவரன் இருக்குமிடம் எளிதாக உணரப்பெறும். 


வாசி என்பது  பிரமரந்திரம் நோக்கிச் செல்லும் பிராணனுக்கு பெயர், ஊசி என்பது சுழுமுனைக்கு பெயர், ஊசி துளையில் பாம்பு அடைப்போம் என்றார் ஒரு பெரியோர். 


அதன் செயல் கீழ்முகமாகச் செல்லும் அபானனது கதியை மேல் நோக்க செய்தல், பயன் இல்லை என்பது.  வாய் பேச்சால் பயன் இல்லை முதலியவற்றை விட்டவர் இறைவனை அடைவர். 


இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்

துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம்

உறக்கத்தை நீக்கி உணரவல்லார்கட்

கிறக்கவும் வேண்டாம் இருக்கலுமாமே.


இடைகலை, பிங்கலை நாடிகளின் வழிப் பிராணன் இயங்குவதை மாற்றி, சுழுமுனை வழியாகப் பிராணனை செலுத்த வல்லார்க்குத் தளர்ச்சி இராது.  உறங்கும் காலத்தில் விழித்திருந்து, பயில்வார்க்கு இறப்பின்றி அழியாது இருக்கக்கூடும். 


சுழுமுனைத் தியானந்தை அதிகாலையில் தொடங்குவார்க்கு அழிவில்லை என்று திருமூல நாயனார் அருளியுள்ளார். 


சிவானந்தமானது எவ்வாறிருந்ததென்று சொல்ல முடியாது.  அது சுட்டறிவினால் அறியத் தக்கதன்று உணரக்கூடியதாகும்.